Saturday, 23 February 2013

ஸ்ரீ சக்கர தியானம்


ஸ்ரீ சக்கர தியானம்

ஸ்ரீ சக்கர தியானத்தைப் பற்றி தெளிவாக விளக்க வேண்டும். இதற்கு முந்தைய பதிவில் அதை நீங்கள் சரியாக விளக்கவில்லை எனவே அதற்கு 30 மதிப்பெண்களே தரமுடியும் என்றும் சொல்லப்பட்டது. எனவே, அம்பிகையைத் தொழுது வேண்டிக் கொண்டு இந்தப் பதிவை அவள் காலடியிலும், உங்கள் அன்பு நெஞ்சங்களிலும் சமர்ப்பிக்கிறேன். ஸ்ரீவித்யையில் முக்கியமான மந்திரம் பஞ்சதசாஷரி, முக்கியமான யந்திரம் ஸ்ரீசக்கரம். அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தனிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்ததாச் சொல்லப் படுகிறது.
ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் யந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம். மும்மூர்த்திகளின் தொழிலுக்கும் மூலஸ்தானம். பிரம்ம வித்தைகளில் சிறந்தது ஸ்ரீவித்யை. அதன் யந்திரம் ஸ்ரீசக்கரம்.
சிவகோணம் நான்கு, சக்தி கோணம் ஐந்து, ஒன்பது கோணங்களினுள்ளும் உண்டாவது நாற்பத்தி மூன்று. இவற்றின் மூலக் காரணத் தாதுக்கள் ஒன்பது. பிந்துஸ்தானத்தில் உண்டான மந்திரக் கோணங்கள் எட்டு இதழ்கள். அதற்கு மேல் வட்டமாய் எழுந்த பதினாறு இதழ்கள். அதற்கு மேல் அழகான மூன்று வட்டம். அதற்கும் மேல் மூன்று சதுரம், ஆக நாற்பத்து நான்கு தத்துவங்களாக அமைந்துள்ளன என்று ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தின் பெருமையை விவரித்துள்ளார். உலகத்தையே மிகமிகச் சிறிய வடிவில் பிரிதிபலிப்பது நம் ஸ்ரீசக்கரமாகிய மகாமேரு. நம் நாட்டிலிருந்து சீனா, திபெத், நேபாளம், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. மாஸ்கோ பல்கலைக் கழக்கத்தில் ஆராய்ச்சிக்காக இடம் பெற்றுள்ளது. விஞ்ஞானிகளையே வியக்க வைக்கும் அற்புதம் ஸ்ரீசக்கரம்.
விரைவாகவும்,இலகுவாகவும் சித்தி, விரும்புபவர்கள் சக்தியின் அம்சமான ஸ்ரீசக்ரத்தின் முன் அமர்ந்து அம்பிகையை மனதில் நினைத்து தியானம் மேற்கொள்ள வேண்டும். இதுவே உயர்ந்த தியானம். ஸ்ரீசக்கரம் தியானிப்போரின் மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தும் சக்தி வாய்ந்தது. ஸ்ரீசக்கரத்தின் முன் மனம் குவிக்கப்படும் போது மனம் தூய்மைப்படுத்தப்பட்டு, புலன்களின் கதவுகள் மூடப்படுகின்றன. பூரணாதியான நிலையில் மனம் நிலைத்து நிற்கும்.
உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை யொளியது காணுந்
தணந்தெழு சக்கரந் தான்தரு வாளே. திருமந்திரம்1348. 
திருவருள் துணையால் சக்கரத்தில் தோன்றும் அம்பிகையின் திருவுருவினை உணர்ந்திருந்து, உள்ளத்தின் உள்ளே நோக்கினால், நோக்குவார்க்கு எங்கும் கலந்து பேரருள் பொழிவாள். அகத்தே மணி, யானை, கடல், புல்லாங்குழல்,மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகிய இன்னோசை பத்தும் ஒலித்திடும். அம்பிகையே சக்கரத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி தந்து அருள்புரிவாள். என்று திருமூலர் ஸ்ரீசக்கரத்தின் பெருமையை பறைசாற்றுகிறார். ஸ்ரீசக்கர தியானம் உயர்ந்த தியானமாகும். இதில் மனம் ஒருமுகப்பட்டு ஏகாக்கிர சித்தம் பெறுகிறது. இதுவே தியானம் வெற்றி பெற, சித்திகள் நமை வந்து அடைய சிறந்த மார்க்கமாகும். அம்பிகையைத் தியானித்தால் தொழுபவர்களுக்கு அவள் அருளாலே எல்லா வளங்களும், நலமங்களும் பெருகும்.காலனும் அணுகான். கதிரவனைப்போல பிரலாசிக்கலாம். நித்தர்களும் அம்பிகையான வாலைப் பெண்ணை தியானிக்காமல் தியானிக்காமல் வெற்றி பெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.
எனவே அவளருளாலே நல்ல குருவை நாடி ஸ்ரீசக்கர தியானத்தை செய்து உய்வோமாக.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்.

1 comment:

  1. நகார சுவதிச்டான பிரம்ம தியான யந்திரம்

    http://saramadikal.blogspot.in/2013/06/blog-post_1124.html
    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete